(இராஜதுரை ஹஷான்)
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவித்தற்கு கடன் உறுதிப்பற்று பத்திரங்களை அரசாங்கம் பெற்றுத்தருவதாக இருந்தால் மூன்று வார காலத்திற்குள் முழு நாட்டிற்கும் பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர்களை எம்மால் விநியோகிக்க முடியும் என லாப் நிறுவனத்தின் தலைவர் டப்ள்யூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சேகரிக்கப்பட்டு அதற்கு நீல நிறம் (லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் நிறம்) பூசப்படும் செயற்பாடுகள் ஒரு சில பகுதிகளில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடு குறித்து பொலிஸ்மா அதிபரரிடம் முறைப்பாடளித்துள்ளோம்.
நிறமாற்றம் குறித்து உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறு லிட்ரோ நிறுவன தலைவரிடம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் அது குறித்து அவர் கவனத்திற் கொள்ளவில்லை.
எரிவாயு கொள்வனவின் போது பாரிய நிதி நெருக்கடியினை எதிர்கொள்வதால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் போது விலை சூத்திரத்திற்கமைய தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதத்திலிருந்து நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் அதற்கு இதுவரையில் அனுமதி கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment