மாவை விநியோகிப்பதற்கு மலையகத்துக்கு எதற்கு அமைச்சு? : திகாம்பரம் கட்டிய வீடுகளுக்குத்தான் இன்று திறப்பு விழா நடத்துகின்றனர் - உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

மாவை விநியோகிப்பதற்கு மலையகத்துக்கு எதற்கு அமைச்சு? : திகாம்பரம் கட்டிய வீடுகளுக்குத்தான் இன்று திறப்பு விழா நடத்துகின்றனர் - உதயகுமார்

(க.கிஷாந்தன்)

"மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்காத தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சானது தற்போது கோதுமை மாவை விநியோகிக்க பார்க்கின்றது. மாவை விநியோகிப்பதற்கு மலையகத்துக்கு எதற்கு அமைச்சு, இது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சா அல்லது மா விநியோக அமைச்சா?" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராகலை, வலப்பனை நகர மண்டபத்தில் இன்று (09.01.2022) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி விட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது எங்கிருக்கின்றனர் எனத் தெரியவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமல்ல பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. இனிவரும் நாட்களில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம். அரிசி விலையும் சடுதியாக அதிகரிக்கப்படலாம். இவ்வாறு நாட்டு மக்களை இந்த ஆட்சியாளர்கள் படுபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு அந்த கொடுப்பனவை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் நாட்டில் வருமானம் இன்றி, பணத்தை அச்சிட்டு இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்குவதால் பிரச்சினைகள் தீராது. அது மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தும்.

அதேபோல ஏனையோருக்கு 5 ஆயிரம் வழங்கப்படும்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 500 ரூபாவுக்கு நிவாரணம். அதுவும் கோதுமை மா. அந்த கோதுமை மாவைகூட தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு ஊடாக விநியோகிக்கப்படும் என அந்த இராஜாங்க அமைச்சர் கூறுகிறார். மலையகத்தில் இன்னும் ஒரு வீட்டைக்கூட கட்டாத அந்த அமைச்சர் மாவை விநியோகித்து அரசியல் செய்ய பார்க்கின்றார்.

திகாம்பரம் கட்டிய வீடுகளுக்குத்தான் அவர்கள் இன்று திறப்பு விழா நடத்துகின்றனர். மாவை விநியோகிக்க மலையகத்துக்கு எதற்கு அமைச்சு? அது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சா அல்லது மாவு விநியோக அமைச்சா?

அதேவேளை, மக்களால் விரைவில் இந்த அரசு விரட்டி அடிக்கப்படும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆசியுடனேயே புதிய ஆட்சி மலரும். அதில் பலம்பொருந்திய அமைச்சராக திகாம்பரம் இருப்பார்" என்றார்.

No comments:

Post a Comment