(இராஜதுரை ஹஷான்)
மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்கு வரத்து சேவை நாளை முதல் வழமையான நேர அட்டவணைக்கு அமைய ஆரம்பமாகும். தூரப் பிரதேச புகையிரத சேவைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும். பொதுப் போக்கு வரத்து சேவையில் பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் ஆகிய அனைவரும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பொதுப் போக்கு வரத்து சேவையில் சமூக இடைவெளியை பேண வேண்டும் என்பதற்கான விசேட திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. 6000 அரச பேருந்துகள் போக்கு வரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையில் சுமார் 6 மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை இன்று தளர்த்தப்பட்டுள்ளது. கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் பொதுப் போக்கு வரத்து சேவையினை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பயணிகளும், பொதுப் போக்கு வரத்து சேவை சாதனங்களின் நடத்துனர் மற்றும் சாரதிகள் பின்பற்ற வேண்டும்.
புகையிரத போக்கு வரத்து சேவை மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்கு வரத்து சேவை நாளை முதல் ஆரம்பமாகும்.
காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையில் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாகும். ஆகவே புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் தமது சுகாதார பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காலை மற்றும் மாலை அலுவலக சேவைக்காகவும், சாதாரண சேவைக்காகவும், அதிக புகையிரத பயணங்கள் வழமைக்கு மாறாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஆகவே புகையிரதத்தில் நெருக்கமாக பயணிப்பதை பயணிகள் இயலுமான அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கான தூரப் பிரதேச புகையிரத சேவை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். புகையிரத பொதி விநியோக சேவை தற்போது ஆரம்பிக்கப்படமாட்டாது.
பேருந்து போக்கு வரத்து சேவை அரச மற்றும் தனியார் பேருந்து போக்கு வரத்து சேவை வழமையான நேர அட்டவணைக்கு அமைய நாளை முதல் ஆரம்பமாகும்.
மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கிடையிலான போக்கு வரத்து சேவைக்காக 6000 அரச பேருந்துகள் நாளை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும். தனியார் பேருந்துகள் 50 சதவீதம் மாகாண போக்கு வரத்து சேவைக்காக ஈடுபடுத்தப்படும்.
ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகள் பேருந்தில் பயணம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே சுகாதார அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயற்படும் பேருந்து உரிமையாளர்கள், நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment