(எம்.மனோசித்ரா)
இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சியின் கோட்பாடுகள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே சர்வதேசத்தின் வரவேற்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். தனி நபர் ஒருவரிடம் மாத்திரம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதன் மூலம் இதனை செய்ய முடியாது. எனவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தினை நீக்கி, 19 ஆவது திருத்தத்தின் கீழ் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பு என்பது பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் உருவாக்கப்பட வேண்டியதாகும். ஆனால் 20 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் வழக்குகளை விசாரித்த சட்டத்தரணிகள் நால்வரால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 20 ஆவது திருத்தத்தினை நீக்கி 19 இன் கீழ் ஆட்சியைக் கொண்டு சென்றால் மாத்திரமே சர்வதேசத்தின் வரவேற்பினைப் பெற முடியும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளோம். எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பதைக் கூற முடியாது.
எனவே மனித உரிமைகளையும், சட்டவாட்சியின் கோட்பாடுகளையும் பாதுகாத்து சர்வதேசத்தின் வரவேற்பினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment