அமெரிக்காவில் குடியுரிமை தேர்வில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும் புரிதலையும் நிரூபிக்க இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை குறைக்க குடியுரிமை தேர்வு முறைகளை கடுமையாக்கியது.
2008ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளை மாற்றியது. அதாவது தேர்வில் 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது.
இந்த கேள்விகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானதாகவும் கடுமையாகவும் இருந்தன. இந்த விதிமுறைகள் 2020 டிசம்பர் 1 இக்கு பிறகு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார்.
அந்த வகையில் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதன்படி இனி 2008ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் எனவும் இது மார்ச் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக அளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 2ஆவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment