வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக முகத்தினை துணியால் மூடிக்கட்டியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டம்..! - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக முகத்தினை துணியால் மூடிக்கட்டியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டம்..!

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையில் மீண்டும் தவிசாளராக திருமதி ஷோபா ஜெயரஞ்சித் இன்று பதவியேற்றுள்ளமையைக் கண்டித்து எதிர்த்தரப்பினரால் பிரதேச சபைக்கு முன்பாக கறுப்புத் துணியால் முகத்தினை மூடிக்கட்டியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி விசாரணை என்ன இழுத்தடிப்பா?, அதிகாரிகளும் ஊழல்வாதிகளா?, ஆளுநரே வர்த்தமானி வெளியீடு விளையாட்டு படகா?, கிழக்கின் நிர்வாகம் யார் கையில்? என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எதிர்ப்புக் கோஷங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு எதிரானதாகவும் இருந்தது.

கிழக்கிலுள்ள 10 உள்ளூராட்சி சபைகளின் 2021ம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பான குழப்ப நிலையையடுத்து, சபை நடவடிக்கைகள் ஒழுங்காக இடம்பெறவில்லை. சபையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு விசாரணை மேற்கொள்ளுமுகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் 08.01.2021ம் ஆண்டிற்கான வர்த்தமானி அறிவித்தலின்படி தவிசாளர்களின் பதவி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, உப தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவ்வர்த்தமானியை இடைநிறுத்தி, பதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தல் 27.01.2021ம் திகதி புதன்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 9 சபைகளுக்கே இவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவித்தல்கள் பின்பற்றக் கூடிய நடைமுறைகள் உள்ளன. கோறளைப்பற்று பிரதேச சபை மாத்திரம் இவ்வறிவித்தலில் உள்வாங்கப்படவில்லை என்பது எதிர்த்தரப்பினரின் ஆதங்கமாகும்.

அதாவது, 09 சபைகளுக்கும் தவிசாளர் தெரிவிற்கான வாய்ப்புள்ளதாகவும், கோறளைப்பற்று பிரதேச சபைக்கு இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதும் ஒரு குறைபாடகவுள்ளது. 

எனவே, 2021ம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டதாகவே கருதி இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளிடப்பட்டுள்ளது. அதனைக் கண்டித்து தாம் நீதிமன்றம் செல்வதுடன், தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் எதிர்த்தரப்பினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment