(செ.தேன்மொழி)
அடையாள அட்டைகளை கொள்ளையடித்து அவற்றை பயன்படுத்தி பல வங்கிகளில் கணக்குகளை ஆரம்பித்தது மாத்திரமின்றி, பண மோசடியிலும் ஈடுபட்ட சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நவீன சங்கீத பொருட்கள் மற்றும் நவீன முறையிலான கணனி இயந்திரங்கள் என்பன குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று இணையத்தளத்தில் விளம்பரம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று வெலிகம பகுதியில் வைத்து குறித்த மோசடியுடன் தொடர்புடைய நாத்தான்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரினால் இணையத்தில் பதிவேற்றப்பட்ட விளம்பரம் தொடர்பில், எவரேனும் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அவசியமான பொருளை அனுப்பி வைப்பதற்காக முற்பணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளதுடன் அதற்காக தமது வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை வைப்பிலிடுமாறும் பின்னர் பொருளை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெருந்தொகையான பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் இந்த மோசடிகளுக்காக பயன்படுத்திய வங்கி கணக்குகளும் பிற நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அதற்கமைய குறித்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்த போதும் அவரிடமிருந்து 6 அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபரின் மோசடிகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் அது தொடர்பில் 071-8591753 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளரிடம் முறைப்பாடளிக்க முடியும். குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment