தங்க சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 19, 2021

தங்க சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்

சீனாவில் தங்க சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் யான்டாய் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10ம் திகதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.

இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி இடிந்து இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.‌ எனினும் சுரங்க நிர்வாகம் விபத்து நடந்த 30 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தது.

மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கியதால் மீட்புக் குழுவினர் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. 

இந்த நிலையில் விபத்து நடந்த 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருப்பது நேற்று தெரியவந்தது. 

சுரங்கத்தில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மீட்பு குழுவுக்கு தெரியப்படுத்தினர். இது மீட்புக் குழுவிற்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. 

சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்கள் ஒரு வாரத்திற்குப் பின் மீட்புப் படையினருக்குத் துண்டுச்சீட்டு ஒன்றை அனுப்பியுள்ளனர். துளை வழியாகக் கம்பி மூலம் உணவு அனுப்பி வைக்கப்பட்டது. 

அந்தக் கம்பி வழியே, சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களில் 12 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக எழுதப்பட்ட துண்டுச்சீட்டு கிடைத்தது. உடனடியாகத் தங்களுக்குத் தேவைப்படும் மருந்து மாத்திரைகளை அனுப்பி வைக்குமாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

சிக்கியிருக்கும் நால்வர் காயமடைந்துள்ளதாக அதன் மூலம் தெரியவந்தது. மீட்புப் படையினர் தேடும் பணிகளைத் தொடர வேண்டுமென்றும், பாதுகாப்பாகத் தாங்கள் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்தது. எஞ்சிய 10 ஊழியர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

வெடிப்பு தொடர்பில் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால், சீனச் சுரங்கங்களில் அவ்வப்போது இத்தகைய விபத்துகள் ஏற்படுவதுண்டு.

No comments:

Post a Comment