(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எமது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இந்த அரசாங்கம் முழுமைப்படுத்த வேண்டும் எனவும், ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரி அபிவிருத்தி வேலைத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே. ராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கல்வி இராஜாங்க அமைச்சராக நான் கடமையாற்றிய காலத்தில் பல நல்ல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமுடன் இணைந்து பல்வேறு பாடசாலை அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்தேன். ஆனால் நாம் ஆரம்பித்த வேலைத் திட்டங்கள் இன்னமும் முழுமையடையாத நிலையே காணப்படுகின்றது.
எமது ஆட்சியில் அபிவிருத்தி செய்ய ஆரம்பித்த பாடசாலைகள் அபிவிருத்தி வேலைகள் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகள் அபிவிருத்தி எனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதில் மலையக பாடசாலை வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததால் ஆசிரியர் நியமனம் கவனம் செலுத்தப்பட்டது. இதில் தாமதங்கள் பல ஏற்பட்டன. ஆனால் நியமனங்களை நாமே வழங்கினோம். அதில் இப்போதைய அரசாங்கம் பெயர் பதித்துக் கொள்ள முடியாது.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இந்த பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே இதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எனினும் கடந்த ஆட்சியில் மாதிரி பாடசாலைகள் மூன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக 400 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இடமும் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் அதனை உருவாக்க இடமளிக்கவில்லை. எனவே இந்த ஆட்சியில் இந்த மாதிரி பாடசாலைகளை உருவாக்க இடமளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் ஜப்பான் அரசாங்கத்துடன் செய்துகொண்ட பொது இணக்கப்பாட்டுடன் பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இது முற்று முழுதாக நன்கொடையில் உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனையும் கைவிடாது முன்னெடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment