இலங்கை அரசின் நடவடிக்கைகள் மக்களை பட்டினிச் சாவு நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே அமைந்துள்ளது - துரைராசா ரவிகரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

இலங்கை அரசின் நடவடிக்கைகள் மக்களை பட்டினிச் சாவு நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே அமைந்துள்ளது - துரைராசா ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன்

இலங்கை அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் பட்டினிச் சாவு நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி (எல்), வனஜீவராசி, வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன தமிழ் மக்களின் வாழ்வாதாரக் காணிகளையும், வளமான பகுதிகளையும் அபகரித்து தமிழ் மக்களின் வழ்வாதாரத்தினை சூறையாடியுள்ளனர். 

இந்நிலையில் தற்போது தமிழ் மக்களின் கடல் வளமும் வேற்று நாட்டவரால் சிதைக்கப்படுகின்றது. இதையும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்கின்றார்கள். இது எமது மக்களை பட்டினிச்சாவு நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துளார்.

முல்லைத்தீவில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில், இதனைவிட மகாவலி (எல்) என்ற போர்வையில் இங்கு காணிகள் அபகரிக்கப்படுகின்றன. எனினும் மகாவலி நீர் இங்கு கொண்டுவரப்படவில்லை.

வன இலாகா என்ற பெயருடன் எங்களுடைய காடுகள் அபகரிக்கப்படுகின்றன. சுமார் முப்பது வருட இடப்பெயர்விற்குப் பிற்பாடு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாடடுக் கேணி உட்பட அந்த மக்களுடைய சிறு புதர்களாக உள்ள காணிகளைக் கூட வன இலாகா எல்லைக் கற்களை நாட்டி அபகரிப்புச் செய்கின்றார்கள்.

இதேபோல் வனஜீவராசிகள் திணைக்களம் என்ற பெயரில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல், நாயாற்றுப் பகுதி என ஆற்றுப் பகுதிகளையும் அபகரிக்கின்றனர்.

இதேவேளை எமது மாவட்டத்திலுள்ள தமிழர்களின் பூர்வீக இடங்கள், அப்பூர்வீக இடங்களிலுள்ள வரலாற்றுத் தொன்மைமிக்க கல் வெட்டுக்கள், கற் பொழிவுகள் கட்டடச் சிதைவுகளை தொல்லியல் திணைக்களத்தினர் தொல்லியல் சார் இடங்களென அபகரிப்பதுடன் பௌத்த மதத் திணிப்பினை மேற்கொள்கின்றனர்.

இவை அனைத்தையும் அபகரித்தது போதாதெனத் தற்போது எங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தடுக்கின்ற செயற்பாட்டை செய்வதற்கு கடற்படையினரோ உரியவர்களோ தயங்குகின்றனர். அதன்மூலம் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கின்றார்கள்.

இதே நிலை தென்னிலங்கையில் காணப்பட்டால், அங்குள்ள கடற்பரப்புக்களிலே இவ்வாறு வேற்று நாட்டு மீனவர்கள் வருகைதந்து மீன்பிடியில் ஈடுபட்டால் இலங்கை அரசும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், கடற்படையினரும் இவ்வாறுதான் வேடிக்கை பார்ப்பார்களா? நிச்சயமாக அவ்வாறான நிலை காணப்படாது.

எனினும் தற்போது வட பகுதிக் கடற்பரப்பெங்கும், குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் என அனைத்துக் கடற்பரப்புக்களிலும் வேற்று நாட்டு மீனவர்களுடைய வருகையும், வளச் சுரண்டல்களும் காணப்படுகின்றன. எமது தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நலிவடையச் செய்வதுதான் இலங்கை அரசின் நோக்கமா?

இலங்கை அரசும், உரிய அதிகாரிகளும், கடற்படையும் இப்பிரச்சினைக்குரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தர வேண்டும். இல்லையேல் இந்திய மீனவர்களை தடுக்கின்ற செயற்பாட்டை எமது மீனவர்களிடம் கையளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment