இஸ்லாமியர்களின் இறந்த உடலங்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தை தேர்வு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையாக இருக்குமாயின் எமது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மஜ்மா நகர் எனும் பிரதேசத்தில் முஸ்லிம் பொது மையவாடிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் பத்து ஏக்கர் காணி உள்ளது. அதில் அடக்கம் செய்வதில் எமது பிரதேச மக்கள் எவருக்கும் எதுவித ஆட்சேபணையுமில்லை என அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எம். ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிலத்தடி நீர் சுமார் 30 அடி ஆழத்தில் உள்ள, குடியிருப்புக்கள் இல்லாத, கொழும்பு மட்டக்களப்புக்கான பிரதான வீதியில் இருந்து மிக நெருக்கமாகவே இவ்விடம் உள்ளது.
நிருவாக ரீதியாகவோ அல்லது தனி நபர் குடியிருப்பின் ஊடாகவோ மாற்று சயமயத்தவர்கள் சம்மந்தப்படாத குறித்த இடத்தை பயன்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுவதற்கு ஆளணி தேவைப்படுமானால் அதற்கும் நாம் தயாராக உள்ளோம். ஜனாஷாக்களை எடுத்துச் செல்வதற்கான வாகண வசதியும் நம்மிடம் உண்டு.
இலங்கையை நாம் ஆளக் கேட்கவில்லை. இலங்கையில் வாழவும், இலங்கை பிரஜையாக வாழ்ந்து மாழ்ந்த பின்னர் எமது சமய முறைப்படி அடக்கம் செய்யவுமே அனுமதி கேட்கிறோம் என அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எம். ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment