(க.பிரசன்னா)
அம்பாந்தோட்டை ஆரபொக்க தோட்டப்பகுதியில் 400 ஏக்கர் காணிப்பகுதியில் மருந்து உற்பத்திகளுக்கான ஒதுக்கப்பட்ட வலயமொன்றை அமைப்பதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்பு ஜனாதிபதி செயலணியால் நேரடியாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடியதும் அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் கொண்ட கைத்தொழில் துறையாக மருந்தாக்கல் கைத்தொழில் துறை அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய அம்பாந்தோட்டை ஆரபொக்க தோட்டப்பகுதியில் 400 ஏக்கர் காணிப் பகுதியில், உலகிலுள்ள பிரதான மருந்தாக்கல் கம்பனிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய விசேட மருந்தாக்கல் வலயத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மூலோபாய அபிவிருத்தி திட்டமாக பிரகடனப்படுத்தி இம்மருந்தாக்கல் முதலீட்டு வலயத்தில் முதலிடுவதற்கு முன்வரும் முதலீட்டாளர்களுக்குரிய மானியங்கள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கருத்திட்டத்தின் முதற்கட்டமாக 200 ஏக்கர்களில் 20 மருந்தாக்கல் கம்பனிகளை நிறுவுவதற்கும், இலங்கை முதலீட்டுச் சபையால் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment