இம்மாதம் மேலும் 51 இலட்சத்து 44 ஆயிரத்து 046 பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கென 2,572 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென கூறிய அவர், இதில் வாழ்வாதாரம் இழந்தோர் சமுர்த்தி பயனாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள், அங்கவீனமுற்றோர் ஆகியோரும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட சகலருக்கும் 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கட்சி, இன, மத பேதமின்றி 74 இலட்சம் பேருக்கு இந்த தொகை வழங்கப்பட்டது. மே மாதத்திலும் இந்தத் தொகையை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்திருந்தார்.
6,29.214 சிரேஷ்ட பிரஜைகளுக்கு 3,146 மில்லியன் ரூபாவும், 100 வயதுக்கு மேற்பட்ட 489 பேருக்கு 2.1 மில்லியன் ரூபாவும் அங்கவீனமுற்றோர் 1,23,601 பேருக்கும் 519 மில்லியன் ரூபாவும், சிறுநீரக நோயாளர் 44,291 பேருக்கு 221 மில்லியன் ரூபாவு வழங்கவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையின் அனுமதி கோரியிருந்தார்.
இதன் பிரகாரம் மொத்தம் 07 இலட்சத்து 97 ஆயிரத்து 635 பேருக்கு 3,988 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. கிராமிய குழுக்களுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள 71,383 பேருக்கும் 356 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 17 இலட்சத்து 98 ஆயிரத்து 293 சமுர்த்தி பயனாளர்களுக்கு 8,991.47 பில்லியன் ரூபாவும் கடந்த காலத்தில் நிவாரணம் கிடைக்காத 7,31,975 பேருக்காக 3,659 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இழந்த 19 இலட்சத்து 24 ஆயிரத்து 967 பேருக்கு 9,624.84 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக வர்த்தமானியின் பிரகாரம் அடையாளம் காணப்பட்ட 06 இலட்சத்து 88 ஆயிரத்து 811 பேருக்காக 3,444 மில்லியன் ரூபாவும் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மொத்தம் 51 இலட்சத்து 44 ஆயிரத்து 046 பேருக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2, 572 கோடி ஒதுக்க அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது.
அவர்கள் படும் கஷ்டத்தை ஒரளவு குறைப்பதற்காக மக்களின் நிதியை கொண்டு மக்களுக்கே வழங்க இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment