(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களை முறையாகச் சென்றடையவில்லை என்று தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், பிரதேச சபை உறுப்பினர்களால் இவ்விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தற்போது அரசாங்கத்தால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கொடுப்பனவுகள் பெருந்தோட்ட மக்களை முறையாகச் சென்றடையவில்லை. இந்நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு மாதத்திற்கு சுமார் 10 நாட்கள் மாத்திரமே நிர்வாகத்தினரால் வேலை வழங்கப்படுகிறது. காரணம் தற்போது வெயில் காலம் என்பதானாலாகும்.
கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சென்ற இளைஞர்கள் பலர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர். அவ்வாறானவர்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை. இவர்கள் மாத்திரமின்றி மேசன் தொழில் செய்பவர்கள், தினக்கூலி தொழில் செய்பவர்களுக்குக் கூட இந்த கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறவில்லை. இப்பிரதேசங்களிலுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் தமக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மாத்திரமே இந்த கொடுப்பனவை வழங்குகின்றனர்.
உண்மையில் தேவையுடைய மக்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. பெருந்தோட்ட மக்கள் வருமையிலுள்ளனர். எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தேர்தலுக்குச் செல்வதும் பொறுத்தமாகாது. வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னரே தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அரசாங்கம் இவை அனைத்திலும் கவனம் செலுத்தி கொடுப்பனவுகள் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment