அம்பாறை ஒலுவிலில் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் - Dr. குணசிங்கம் சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

அம்பாறை ஒலுவிலில் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் - Dr. குணசிங்கம் சுகுணன்

பாறுக் ஷிஹான்
அம்பாரை மாவட்டம் ஒலுவில் துறைமுகப்பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையமொன்றை கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் எமக்குத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட மட்டில் இடம்பெற்று வருகிறது. 

இன்று வெள்ளிக்கிழமை (27) காலை முதல் மதியம் 2 மணி வரை பல சரக்கு கடைகள், மருத்துக நிலையங்கள் சில திறக்கப்பட்டிருந்தது. பொலிஸ் நிலையம் பிரதேச செயலகத்தில் வியாபார அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் வழமை போன்று நகரப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறிருந்த போதிலும், பின்னர் அரசாங்கத்தின் அவசர உத்தரவு காரணமாக மேற்குறித்த மருந்தகங்கள் பல சரக்குக் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளது. கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

அத்துடன், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள முக்கிய சந்திகளில் பாதுகாப்புத்தரப்பினர் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும், இன்று முஸ்லிம்களின் ஜும்ஆத் தொழுகை எந்தப்பள்ளி வாசல்களிலும் இடம்பெறவில்லை. தற்போது மீன்பிடி நடவடிக்கைகள் கூட மந்தகதியில் இந்தப்பகுதிகளில் இடம்பெறுவதைக்காண முடிந்தது.

குறிப்பாக, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பகுதிகளில் மீனவர்கள் எவரும் தொழிலுக்குச் செல்லவில்லையென்பதுடன், தோணிகள் வலைகளுடன் கரையோரங்களில் காணப்பட்டன.

மேலும், இப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை அறிவூட்டி வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் எமக்குத் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது கருத்தில், தற்போதும் எமது பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாகக் காணப்பட்ட போதிலும், எமது சுகாதார நடைமுறைகள் உருக்கமான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

அந்த வகையில், எதிர்காலத்தில் வைரஸின் தாக்கம் எமது பிரதேசத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்காக இலங்கை கடற்படையினரின் உதவியுடன் எமது பூரண ஆதரவுடன் ஒலுவில் துறைமுகப் பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருக்கின்றோம். தேவையேற்படின், மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வோமென்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனக் கூறினார்.

No comments:

Post a Comment