(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மாவட்டங்களில் பொதுத் தேர்தலில் அமோக பெற்றி பெறும். தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவினை முழுமையாக கூட்டணியின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். ஐக்கிய தேசிய கட்சி பொதுத் தேர்தலில் எச்சின்னத்தில் போட்டியிட்டாலும் இம்முறை படுதோல்வியடையும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன தலைமையில் தேர்தலுக்கான செயற்திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன வெற்றி பெறவில்லை. அதற்கு பல்வேறு அரசியல் காரணிகள் அப்போது செல்வாக்கு செலுத்தின.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மாவட்டங்களில் இம்முறை எம்மால் வெற்றி பெற முடியும். நுவரெலியா மாவட்டத்தில் 102090 வாக்குகளினால் பொதுஜன பெரமுன தோல்வியடைந்தது. இம்முறை இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment