எந்தவித சாட்சியமோ, அடிப்படையோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் அடங்கலான சந்தேக நபர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில பொலிஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளினதும் ஜனாதிபதி வேட்பாளர்களினதும் தேவைக்காக வீணான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
நீதித்துறை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறை பின்னடைந்தது. போரா மாநாடு கொழும்பில் நடைபெறுவதோடு 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பங்குபற்றியுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புள்ள பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தரப்பு நாட்டில் சுமுகநிலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் எந்தவித சாட்சியமும் அடிப்படையும் அற்றவர்கள் கைதாகி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேரடி தொடர்போ சாட்சியமோ அற்றவர்களை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணமின்றி அவர்களை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும்.
நடுநிலையாக செயற்பட்டு 1994 முதல் 2018 வரை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவராக இருந்த ஹஜ்ஜுல் அக்பர் காரணமின்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நடுநிலை நிலைப்பாட்டுடன் செயற்பட்ட அமைப்பிற்கு தலைமை தாங்கி செயற்பட்ட ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் இரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைதினால் முஸ்லிம் சமூகம் அச்சமடைந்துள்ளது.
டொக்டர் சாபி போன்ற ஒருவரை உருவாக்கி சமூகத்தில் மோதல் ஏற்படுத்துவதற்காக இவ்வாறான அநீதியான கைதுகள் இடம்பெறுகின்றன. எந்த தவறும் செய்யாத ஹஜ்ஜுல் அக்பரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பொலிஸ் மா அதிபரையும் ஜனாதிபதியையும் கோருகிறோம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment