அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டதற்கான உரிய ஆவணங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பகிரங்க வேண்டுகோள் விடுத்தது.
ஜனாதிபதி வேட்பாளருக்கு அவர் தகுதியானவரா? இல்லையா? என்பதை இதன் பின்னரே வெளிப்படுத்த முடியுமெனவும் அக்கட்சி வலியுறுத்தியது.
கொழும்பு டார்லி வீதியிலமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சு.கவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டதற்கான ஆவணங்களைப் பெற்றுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றால் அந்த ஆவணங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதி வேட்பாளருக்கு அவர் தகுதியானவரா இல்லையா என்பதை அறிய முடியும்.
ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவதை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே திகழவுள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்புகளை அவதானித்துவிட்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறும் சு.கவின் மாநாட்டில் எமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்போம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 11ஆம் திகதி அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காதென எம்மால் உறுதியாக கூற முடியும். அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை மாத்திரமே ஏற்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment