மட்டக்களப்பு பிள்ளாயாரடியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை தாக்கி அவரிடம் 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய இரு போக்குவரத்து பொலிஸார் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு போக்குவரத்து பொலிஸார் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் பிள்ளையாரடி பகுதியில் வீதி சோதனை கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் நிறுத்துமாறு பணித்தனர்.
பொலிஸாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றதையடுத்து பொலிஸார் அவரை பின் தொடர்ந்து சத்திருக் கொண்டான் பகுதியில் வைத்து மடக்கிபிடித்த போது அவர் மதுபோதையில் இருப்பதை கண்டு அவரை தாக்கி அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட உதவி கல்விப் பணிப்பாளர் பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் இரு போக்குவரத்து பொலிஸாரையும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உடனடியாக கமையில் இருந்து இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி கல்லடி பாலத்திற்கு அருகில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய ஒருவரிடம் 7 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய இரு போக்குவரத்து பொலிஸார் கைது செய்யப்பட்டு கடமையில் இருந்து இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment