திருக்கேதீஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே.வைத்தீஸ்வரக் குருக்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் வட மாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய இந்த பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில், அனைத்து மதங்களினுடைய பிரதிநிதிகள் குழுவொன்றை ஸ்தாபித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். அதன்மூலம் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் இந்து மதத்தைச் சேர்ந்த மூன்று பேர், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த மூவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அரச அதிபர் சார்பில் ஒருவர் மற்றும் பொது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் கொண்ட குழு ஸ்தாபிக்கப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்களினால் இந்து ஒளி சஞ்சிகை மற்றும் நந்திக்கொடி ஆகியன ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.
No comments:
Post a Comment