அரச வைத்தியர்கள் இன்று (03) காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரவு 8 மணி வரை 24 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது. சிங்கப்பூர் ஒப்பந்தத்தினூடாக முழு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் அது குறித்து அதிகாரிகளை தௌிவுபடுத்திய போதிலும், அதிகாரிகள் உரிய பதிலை வழங்கவில்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழமை போன்று இயங்குவதுடன் சிறுவர், புற்றுநோய், சிறுநீரக மற்றும் மகளிர் வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை.
எனினும், வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, இன்று தனியார் வைத்திய சேவைகளில் இருந்தும் விலகுவதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்தது.
விதிக்கப்பட்டுள்ள புதிய வரிவிதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், எஸ்.ஆர். விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment