பேலியகொட நகர சபையின் தேசிய மக்கள் சக்தி பெண் உறுப்பினரான டிஸ்னா நிரஞ்சலா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதிபராக கடமையாற்றும் அவரது கணவனும், மகனும் பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருட்களை வைத்திருந்தபோது அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸ் பிரிவின் எந்தகல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றையதினம் (05) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 1.2 கி.கி. நிறையுடய ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபரான 54 வயதுடைய குறித்த கணவரும், 22 வயதுடைய அவருடைய மகனுமே பொலிஸாரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
மிக நீண்ட நாட்களாக போதைப் பொருள் வியாபாரத்தினை பாரிய அளவில் செய்து வந்துள்ளமை மேலதிக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
நாட்டில் போதைப் பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனம் செலுத்திவரும் நேரத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தமக்கு கவலையளிப்பதாகவும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க திசைகாட்டி எடுக்கும் திட்டத்தை ஆதரிப்பதற்கும் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கம்பஹா மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதன் பிரதியை தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்றையதினம் (06) தம்புத்தேகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பல கோணங்களிலும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
No comments:
Post a Comment