லோரன்ஸ் செல்வநாயகம்
நாட்டின் விளையாட்டு வீரர்களை பாதுகாத்து விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவைப்படும் தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் விளையாட்டுத் துறையைப் பற்றி பேசும்போது வசீம் தாஜுதீனை தவிர்த்து அதனை முன்னெடுக்க முடியாதுள்ளது.
எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடாது சிறந்த திறமையான பல விருதுகளை வென்ற ஒரு வீரர் அவர். எனினும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் குறிப்பிடத்தக்க சந்தேகம் நிலவுகிறது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தீவிரமாக அதற்கான விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அந்த மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் திட்டமிட்ட படுகொலை இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பான சந்தேகங்கள் வலுவானதாகக் காணப்படுகின்றன.
கஜ்ஜா என்ற போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிசிடிவி விசாரணைகளில் அவர் அந்த படுகொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதனுடன் தொடர்ச்சியாக மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகி இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்ட ஒருவர் அதற்கான ஆயுதத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவருகின்றன.
அதேபோன்று செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனமும் இந்த தாஜுதீன் கொலைக்கு உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் வெகுவிரைவில் தேவைப்படும் விசாரணைகளை நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
நாட்டின் விளையாட்டு வீரர்களை பாதுகாத்து விளையாட்டுத் துறை முன்னேற்றத்துக்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
No comments:
Post a Comment