நேர முகாமைத்துவத்தில் கடற் புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி : மனம் திறந்தார் ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Monday, October 6, 2025

நேர முகாமைத்துவத்தில் கடற் புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி : மனம் திறந்தார் ரவிகரன் எம்.பி

நேர முகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், கடற் புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேர முகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப் பாடசாலையில் நேற்று (05) இடம்பெற்ற சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேர முகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச ரீதியாக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் என உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை இந்தக் கிராமத்தில் ஒழுங்கு செய்து சிறார்கள் மற்றும் முதியவர்களை அழைத்து மதிப்பளிப்பது உண்மையிலே ஒரு சிறப்பான விடயம். அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாதனையாளர்களும் மதிக்களிக்கப்படுகின்றனர்.

அந்த வகையிலே எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிகமிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற் றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் பத்து வருடங்கள் இருந்தேன். அந்தக் காலப்பகுதியில் கடற் புலிகளின் தளபதி சூசை எமக்கு நேர முகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்த வகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது.

இவ்வாறாக நேர முகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக் கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப் பற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன்.

இது தவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொகுசுப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அடுத்ததாக கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் பின்தங்கியுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே நாம் முன்கொண்டு செல்ல முடியும்.

எனவே சிறுவர்கள் அனைவரும் நல் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது எமது சமூகங்களில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக போதைப் பொருள் ஊடுருவல்களும் அவற்றால் ஏற்படும் சீர்கேடுகளும் மிகப்பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. 

இவ்வாறான சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துமாறு தொடர்சியாகக் கோரி வருகின்றோம். அந்த வகையில் அனைத்து வகையான சீர்கேடுகளும் கட்டுப்படுத்தப்படுமென உரியவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இவ்வாறான சமூகச் சீர் கேடுகளைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகின்றோம்.

அத்தோடு நிச்சயமாக எமது மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே உயர்த்த முடியும். நாம் தற்போது வெளி மாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். 

முல்லைத்தீவை முல்லைத்தீவு பிள்ளைகள் ஆட்சி செய்ய வேண்டும். வவுனியாவினை வவுனியா பிள்ளைகள் ஆட்சி செய்ய வேண்டும். மன்னாரிலும் அந்த நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். 

ஆட்சி செய்வதென்றால் அரசியல் ரீதியாக ஆட்சி செய்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை. சிறார்கள் அனைவரும் நல்லமுறையில் கல்வி கற்று அந்தந்த மாவட்டங்களில் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை தாமே நிரப்பக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டுமென்பதையே தெரிவிக்கின்றேன். இந்த நிலை ஏற்பட்டால் வன்னியும், முல்லைத்தீவும் தன்னிறைவு பெறும் என்றார்.

No comments:

Post a Comment