ஆப்கான் நில நடுக்க பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டியது : தொடரும் மீட்புப் பணிகள் - News View

About Us

About Us

Breaking

Monday, September 1, 2025

ஆப்கான் நில நடுக்க பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டியது : தொடரும் மீட்புப் பணிகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 800 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

6.0 அளவிலான இந்த நில நடுக்கத்தால் ஆப்கானின் 4 மாகாணங்களில் குறைந்தது 800 பேர் மரணமடைந்திருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN Ocha) கூறியுள்ளது.

குறைந்தபட்சம் 2,000 பேர் காயமடைந்திருக்கலாம், என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தொலைதூர மலைப் பிரதேசங்களில் இருக்கலாம் என கூறுகிறது.

இந்த பகுதிகளுக்கான வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அணுகுவதற்கு கடினமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறைந்தபட்சம் 12,000 பேர் நேரடியாக நில நடுக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் Ocha அமைப்பு கூறுகிறது.

தாலிபன் நிர்வாகம் கூறியது என்ன?
முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபன் அரசு எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தற்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள மாகாணங்களிலிருந்து ஆதரவு குழுக்களும் விரைந்து கொண்டிருக்கின்றன, "என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் நூற்றுக்கணக்கானோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நில நடுக்கம் எங்கு ஏற்பட்டது?
8 கிலோ மீட்டர் (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரமான ஜலாலாபாத்திலிருந்து 17 மைல் (27 கிலோ மீட்டர்) தொலைவில் இதன் மையப்பகுதி இருந்தது.

இந்த நில நடுக்கம் குனார் மற்றும் லக்மான் மாகாணங்களையும் பாதித்துள்ளது. மேலும் 140 கிலோ மீட்டர் (87 மைல்) தொலைவில் உள்ள நாட்டின் தலைநகர் காபூலில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நில நடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கிலோ மீட்டர் (17 மைல்) தொலைவில் இந்த நில நடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது.

இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது.

குனார் மாகாணத்தின் சவ்காய் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 35 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுத்து வருவதாக பிபிசிக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன.

பிபிசி பார்த்த ஒரு வீடியோவில், பொதுமக்கள் சிலர் மலைகளால் சூழப்பட்ட ஒரு திறந்த பகுதியில் கூடியுள்ளனர். காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் செல்லப்படுகின்றனர், குழந்தைகள் கதகதப்புக்காக போர்வைகளால் போர்த்தப்பட்டு தரையில் கிடத்தப்படுகின்றனர்.

நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர்.

தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று காலையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன.

இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது.

உதவி கோரும் தாலிபன் அரசு
தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளம் மற்றும் நில நடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான வீதிகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment