கண்டியில் இடம்பெற்று வரும் ஶ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற வீடியோ ஒன்று தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த வீடியோ காட்சியில் போக்குவரத்து கடமை சீருடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்து செல்லுமாறு கடுமையான வார்த்தை பிரயோகம் மூலம் சொல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
அருகில் மக்கள் ஶ்ரீ தலதா வழிபாட்டுக்கான வரிசையில் நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கண்டி மாவட்டம் 1 இற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த இராணுவ உத்தியோகத்தர் பெண் ஒருவரை வரிசையின் இறுதியில் கம்பிகளின் ஊடாக அனுப்ப முயற்சித்ததால் ஆத்திரமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment