(எம்,ஆர்.எம்.வசீம்)
வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபா செலவிடுவதற்கு முடியும் என தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளதன் மூலம் தேர்தல் செலவு கண்காணிப்பு சட்டத்தை ஆணைக்குழு முறைகேடாக பயன்படுத்தி இருக்கிறது. அதனால் குறித்த சட்டம் மூலம் மக்களின் எதிர்பார்ப்பை வீணடித்துள்ள தேர்தல் ஆணைக்குழு, தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்க இருக்கிறோம் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், விகிதாரசர தேர்தல் முறையில் இடம்பெற்றுவரும் மோசடிகளை தவிர்ப்பதற்காக தேர்தல் செலவு கண்காணிப்பு சட்டத்தை மிகவும் சிறமத்துக்கு மத்தியில் நாங்கள் பாராளுமன்றத்தில் அனுமதித்துக் கொண்டாேம்.
என்றாலும் எதிர்க்கட்சிகள் ஊழலுக்கு எதிர்ப்பு என தெரிவித்தாலும் இந்த சட்டத்தை கொண்டுவரவும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்றாலும் சட்டமூலத்தை அனுமதித்துக் கொள்ள பாராளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு அனுமதித்துக் கொண்டாோம்.
தேர்தல் செலவு கண்காணிப்பு சட்டம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலேயே அமுல்படுத்தப்பட இருந்தது. என்றாலும் அந்த தேர்தல் இன்னும் இடம்பெறவில்லை. தற்போது இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
தேர்தலில் ஒரு வேட்பாளர் எந்தளவு தொகை செலவிட முடியும் என்பதை நிர்ணயிக்க தேவையான வழிகாட்டலை குறித்த சட்டத்தில் பரிந்துரைத்திருக்கிறோம். வேட்புமனு தாக்கல் செய்து ஒரு வாரத்துக்குள் தேர்தல் ஆணைக்குழு குறித்த வழிகாட்டலின் பிரகாரம் ஒரு வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் எத்தனை ரூபா செலவிட முடியும் என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
அதன் பிரகாரம் இந்த தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 20 ரூபா அல்லது அதற்கு நிகரான ஒரு தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உட்பட 20 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, தேசிய மக்கள் சக்தி பாேன்ற பிரதான கட்சிகள் 200 ரூபா முதல் 400 ரூபா வரை பரிந்துரைத்தன.
இறுதியில் தேர்தல் ஆணைக்குழு தற்போது ஒரு வாக்களருக்கு வேட்பாளர் ஒருவர் 109 ரூபா செலவிட முடியும் என நிர்ணயித்துள்ளது. இது அசாதாரணமாகும். ஏனெனில் 109 ரூபாவை ஒரு இலட்சத்து 71 ஆயிரம் வாக்குகளால் பெருக்கிப்பார்த்தால், 186 கோடி ரூபா வரை அமைகிறது.
தேர்தல் ஆணைக்குழுவின் இந்த தீர்மானம், தேர்தல் செலவு கண்காணிப்பு சட்டம் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பு வீணாகியுள்ளது. ஆணைக்குழுவே இந்த சட்டத்துக்கு பிழையான அர்த்தம் தெரிவித்து செயற்படுத்தி இருக்கிறது. அதனால் தேர்தல் செலவு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எடுத்திருக்கும் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு தெரிவித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment