தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2024

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்று திங்கட்கிழமையுடன் (05) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக உரிய தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் செல்லுபடியாகாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவடைவதோடு, எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தபால் வாக்கு விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏனைய வாக்காளர்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்று வரை 14 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் மேலும் ஒரு அரசியல் கட்சியும் 5 சுயாதீன வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறவுள்ளது. அந்த காலத்துக்குள்ளேயே ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment