பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதால் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார்? : அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 4, 2025

பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதால் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார்? : அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரணமாகக் கருத வேண்டாம்.

எமது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இரு நாட்டு பொலிஸார், சர்வதேச பொலிஸ், இந்திய புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்பினரின் அர்ப்பணிப்பான சேவைக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதென்பது சாதாரண விடயமல்ல. இதனை விட பாரிய குற்றங்கள் தொடர்பில் அறிந்திருப்பதால் நாமல் ராஜபக்ஷவுக்கு இது சாதாரண விடயமாக இருக்கலாம். எனவே இது அவர்களுக்கு சிறிய விடயமாக இருந்தாலும் நாட்டுக்கு பெரிய விடயமாகும். அடுத்த கட்ட விசாரணைகளில் வெளியாகவிருக்கும் தகவல்களில் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட பலரது தகவல்களும் வெளியாகும்.

படிப்படியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கமைய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களமும், பொலிஸாரும் மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவர்.

மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிறிதாக எண்ண வேண்டாம் என்றும், சற்று முற்போக்காக சிந்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். அண்மையில் ஊடக அடையாள அட்டையைப் பயன்படுத்தி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே சிலரது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் நாமல் ராஜபக்ஷ எதற்காக இந்தளவுக்கு களவரமடைந்தார் என்பது எமக்கு தெரியும். குற்றங்களுடன் தொடர்பற்ற எவரும் வீணாகக் கலவரமடையத் தேவையில்லை. மாறாக வேறு தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை பொலிஸாருக்கு வழங்குவது சிறந்ததாகும். இங்கு எந்தவொரு பிரசாரமும் முன்னெடுக்கப்படவில்லை. பொலிஸாரை கௌரவிப்பதற்காவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

No comments:

Post a Comment