அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். ஒருவேளை திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் 30 நாட்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் குறித்து அரசியலமைப்பின் 30(3) உப பிரிவு மற்றும் 62(2) உப பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு உறுப்புரைகளும் அரசியலமைப்பின் 83(ஆ) உறுப்புரையுடன் முரணாக காணப்படுவதால் இதனை திருத்தம் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இல்லாத சிக்கல்களை தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். ஒருவேளை இந்த திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் 30 நாட்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.
22 ஆவது திருத்தத்தை அவசர சட்டமாக பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது என அரசியலமைப்பின் 122 (3) உப பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையிலும் இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது. தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் 13 நாட்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment