2024 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவில் மீதமான 5000 ரூபா எதிர்வரும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் சம்பளம் வழங்கிய பின்னர் ஏப்ரல் மாத சம்பளத்துடன் 10 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று குறைந்த வருமானம் பெறும் 28,00,000 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவில் 5000 ரூபா கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து மீதமான 5000 ரூபாவை ஏப்ரல் மாதத்தில் வழங்குவதற்கு அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அவரிடம் நேற்று வினவியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 10,000 கோடி ரூபா வருடாந்தம் செலவிடப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேலும் 5000 ரூபா அதிகரிக்கப்படுவதோடு 1300 - 1400 கோடி ரூபா நிதியை மேலதிகமாக செலவிட நேரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியையும் மே மாதத்தில் மேலும் 10 கிலோ அரிசியையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணமாகவும் விவசாயிகளுக்கு நெல்லுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளது.
அதேபோன்று ஓய்வூதியகாரர்களுக்கு வழங்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுசெய்யப்பட்ட அதிகரித்த 2500 ரூபாவை ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment