பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு பயங்கரவாதத்திற்கும் உடன்படாத ஐக்கிய மக்கள் சக்தி, அரச பயங்கரவாதத்தின் மூலம் பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் அனைத்து விதமான தாக்குதல்களையும் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சுதந்திர பலஸ்தீனத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் பலஸ்தீன ஒற்றுமைப்பாட்டுக்கான அமைதி வழி ஆர்ப்பாட்டமொன்று (09) மாலை கொழும்பு ஏழு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகின் பலம் வாய்ந்த நாடுகள் கூட இரு நாட்டுத் தீர்வுக்கு அழைப்பு விடுத்தாலும் கூட, இந்தத் தீர்வை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சித்து வருவது வருத்தம் அளிக்கிறது.
குடிமக்கள் மீது பாரிய படுகொலைகளை நடத்திவரும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஏன் உடன்படவில்லை என்பது பிரச்சினைக்குரிய விடயம், இரு நாட்டுத் தீர்வுக்கு இஸ்ரேல் தயார் இல்லை.
அவ்வாறே, செங்கடலின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி 250 மில்லியன் ரூபாவை செலவு செய்து இந்நாட்டு கடற்படையையும் கப்பலையும் ஈடுபடுத்துவது அங்கீகரிக்க முடியாத விடயம், இதனால் நாட்டுக்கு எந்த பலனும் கிடைக்காது.
ராஜபக்சர்கள் வங்குரோத்தடையச் செய்த நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கும்போது, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம்.
நாட்டில் மேலதிகமாக பணம் இருந்தால், குறித்த பணத்தை மக்களை வாழ வைக்க பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
No comments:
Post a Comment