2023ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் எனும் விருதை ஆர்ஜென்டீனா அணி தலைவர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
FIFA சிறந்த வீரர் விருதையும் மெஸ்ஸி தட்டி சென்றுள்ளார். இலண்டனில் 2023 ஆம் ஆண்டுக்கான FIFA விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் இந்த விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
இந்த சீசனில் மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதோடு, அதில் சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருதையும் தட்டிச்சென்றார்.
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் தனது முதல் உலகக்கோப்பையை வென்று மெஸ்ஸி அசத்தினார்.
உலகசாம்பியனான மெஸ்ஸி, பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். அவரின் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவடைந்த நிலையில், அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார்.
அணியில் இணைந்ததோடு அந்த அணிக்காக முதல் கோப்பையையும் வென்று கொடுத்து மெஸ்ஸி அசத்தினார்.
அத்தோடு இந்த ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர்’ விருதுக்கும் அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த விருதை மெஸ்ஸி ஏற்கனவே 7 முறை வென்ற நிலையில்,நோர்வேயின் இளம் வீரர் எர்லிங் ஹாலந்தை வீழ்த்தி 8ஆவது முறையாக ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர்’ விருதை கைப்பற்றினார்.
அத்தோடு மெஸ்ஸி கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment