அண்டை நாடுகளின் இராணுவ தலையீடு பற்றிய அச்சம் காரணமாக நைகரின் இராணுவ சதிப்புரட்சி தலைவர்கள் நாட்டின் வான் பகுதியை மறு அறிவிப்பு வரை மூடியுள்ளனர்.
நைகர் வான் பரப்பில் தற்போது எந்த விமானமும் பறக்கவில்லை என்று விமானப் போக்குவரத்து தொடர்பில் கண்காணிக்கும் இணையதளம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைக்குள் (06) பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமது பசூம் பதவியில் அமர்த்தப்படாவிட்டால் படைகளை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என்று மேற்கு ஆபிரிக்க நாடுகளின் அமைச்சு எச்சரித்திருந்தது.
நைகர் இராணுவம் ஏற்கனவே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது என்று இராணுவ அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 26 ஆம் திகதி பசூம் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி காவல் படையின் தளபதி ஜெனரல் அப்துர் ரஹ்மான் சியானி, நாட்டின் புதிய தலைவர் என தம்மை அறிவித்துக் கொண்டுள்ளார்.
இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு நைகரின் முன்னாள் காலனியான பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டன.
இந்நிலையில் தேசிய தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய நைகரின் இராணுவ அரசின் பிரதிநிதி, வெளிநாட்டு சக்தி ஒன்று நைகர் மீது தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நெருக்கடி கூட்டம் ஒன்றை நடத்திய மேற்கு ஆபிரிக்க நாடுகள் அமைப்பு, இராணுவ தலையீட்டுக்கான சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருந்தது.
இந்த பிராந்திய கூட்டமைப்பில் நைஜீரியா, செனகல், டோகோ மற்றும் கானா உட்பட 15 மேற்கு ஆபிரிக்க நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இராணுவ சதிப்புரட்சி தலைவர்கள் அதிகாரத்தை கைவிடும் சமிக்ஞை எதனையும் வெளியிடாததோடு இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவானவர்கள் கடந்த ஞாயிறன்று நைகர் தலைநகர் நியாமியிலுள்ள அரங்கு ஒன்றில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினர்.
நைகர் அணு சக்திக்கு முக்கியமான மூலமாக இருக்கும் யுரேனிய உற்பத்தி நாடாக இருப்பதோடு பசூம் ஆட்சியில் அந்த நாடு இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான மேற்கத்திய கூட்டணியில் இருந்து வந்தது.
No comments:
Post a Comment