கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் இராணுவம்.
‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான் வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான, குழந்தைகளைக் கொல்லும் சியோனிச பயங்கரவாத ஆட்சியாளர்களால் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் நாட்டின் தற்காப்பு பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஒரு வலிமையான மற்றும் துல்லியமான பதிலடியைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், இஸ்ரேல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான் வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது.
மேலும் அந்நாட்டின் இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
No comments:
Post a Comment