(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள், பிரதி தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆணையாளர்கள் சர்வாதிகாரத்துடன் செயற்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உகறுப்பினர் நளின் பண்டார எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை (14) குருணாகலில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள், பிரதி தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆணையாளர்கள் சர்வாதிகாரத்துடன் செயற்படுகின்றனர். இந்த தெரிவுகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து கருத்து கோரல் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு இரகசிய கருத்து கோரலை கோர முடியாது. உறுப்பினர்கள் பகிரங்கமாக தமது கைகளை உயர்த்தி வாக்களிக்க வேண்டும்.
ஆனால் குருணாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ளுராட்சி ஆணையாளர்கள் அராசங்கத்துக்கு சார்பாக அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தவறான முறைமையை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பில் பொது நிர்வாக செயலாளருக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம். உள்ளுராட்சி மன்ற சட்டங்களுக்கமைய செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம்.
நீதிமன்றத்தை நாடி இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். அத்தோடு கொழும்பு மாநகர சபை மேயர், பிரதி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது ஆணையாளர்கள் முறையாக செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment