(எம்.மனோசித்ரா)
தேர்தலை நடாத்துவதற்கு கட்டளையை பிறப்பித்த நீதிபதிகள் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுதாகவும், மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறைக்குட்படுத்தி அரசாங்கம் ஜனநாயக விரோத போக்கினை முன்னெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ ஃபிரெஞ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைமையகத்தில் நேற்று (30) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், இச்சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் அபிவிருத்தி ஆலோசகர் மற்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் எட்வட், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின்போது இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் பொருளாதார இலக்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்கள் மேலும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அநுரகுமார திசாநாயக்க, தேர்தலை நடத்தாது அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்துள்ளமை தொடர்பிலும் ஐ.நா. பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
No comments:
Post a Comment