பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நாம் பொறுப்பு : சம்பள அதிகரிப்புடன் 10 பேர்ச் காணியும் வழங்கப்படும் - அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 13, 2025

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நாம் பொறுப்பு : சம்பள அதிகரிப்புடன் 10 பேர்ச் காணியும் வழங்கப்படும் - அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமின்றி, 10 பேர்ச் காணி வழங்கப்படும். இவ்வாண்டுக்குள் அந்த மக்களுக்காக 6000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நாம் பொறுப்பு என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு நிச்சயம் வழங்கப்படும். வரவு செலவு திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருக்கின்றார். இந்த சம்பள அதிகரிப்பு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கின்றோம்.

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

எனவே அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமல்ல, அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கவில்லை. அவர்களுக்கென சொந்த காணி இல்லை. வீடு இல்லை.

எனவே இவ்வாண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு 6000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஒரு வீட்டுக்கு 28 இலட்சம் நிதி ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நிதியுதவியுடன், அரசாங்கத்தின் நிதியும் இதற்காகப் பயன்படுத்தப்படும். 10 பேர்ச் என்ற அளவில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்க எதிர்பார்க்கின்றோம்.

இவை மாத்திரமின்றி தேயிலை உற்பத்தி துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நாம் பொறுப்பு கூறுவோம்.

மலையகத்திலுள்ள பெருந்தோட்ட மக்களையே நாம் மலையக மக்கள் என விளிக்கின்றோம். அவர்களது வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment