இலங்கை இனப் படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனடாவில் தமிழர் இனப் படுகொலை நினைவுச் சின்னம் திறப்பு, இனப் படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்
சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப் படுகொலை நினைவுச் சின்னம் திறப்பு இனப் படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன்.
ஒரு விடயத்தை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன், இலங்கை இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. அந்த கூற்று ஆதாரமற்றது மாத்திரமல்ல மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
எந்தவொரு சர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப் படுகொலை குற்றவாளியாக கண்டறியவில்லை.
இலங்கையில் நடந்தது துன்பகரமான ஆனால் கனடா உட்பட 30 க்கும் அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினருடனான மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இராணுவ நடவடிக்கை.
அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எந்த சமூகத்திற்கும் எதிரானது இல்லை.
போரின்போது அப்பாவிகள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மன வேதனையை ஏற்படுத்தினாலும், மோதலை இனப் படுகொலை என சித்தரிப்பது உண்மையை சிதைப்பது மாத்திரமல்லாமல், அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம்.
கனடாவில் இடம்பெறும் இந்த செயற்பாடுகள், நமது கள யதார்த்தங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.
மேலும் வாக்கு வங்கியை நோக்கமாகக் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம். மேலும் ஒரு தேசமாக காயங்களை ஆற்றுவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.
No comments:
Post a Comment