சர்வதேச பாடசாலைகள் மீது கண்காணிப்பு, ஒழுங்குபடுத்தல்களுக்கு விசேட பிரிவை அமைக்க பரிந்துரை : தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு Teaching License வழங்கவும் முன்மொழிவு - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

சர்வதேச பாடசாலைகள் மீது கண்காணிப்பு, ஒழுங்குபடுத்தல்களுக்கு விசேட பிரிவை அமைக்க பரிந்துரை : தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு Teaching License வழங்கவும் முன்மொழிவு

சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக செயற்படுவதற்கும் அவை தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பாக தற்பொழுது காணப்படும் சட்டக் கட்டமைப்புகள் காலத்தின் தேவைக்கேற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது புலப்பட்டது.

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (08) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இதில், இலங்கையில் காணப்படும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாகவும் அந்தப் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அதன் தரம் என்பவற்றை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சர்வதேச பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் காணப்படாத பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான அளவுகோல்கள் தேசிய கல்வி ஆணைக்குழுவால் (National Education Commission) தயாரிக்கப்பட்டு வருவதாக இதன்போது புலப்பட்டது.

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி ஆலோசனை சேவையில் (In service Advisors) காணப்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவரால் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஆங்கிலமொழி மூலமான உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. 

அதற்கமைய, மாணவர்களின் தொடர் கல்விக்கு இடையூறாகவுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவரால் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் தனியார் ஆசிரியர்களின் தரம் தொடர்பாக குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதுடன், அந்த ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் தரம் தொடர்பாக சமூகத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பாகவும் குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

அதன்படி, தனியார் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே சிறந்ததென கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு பரிந்துரைத்தது.

ஏனைய நாடுகளில் தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் (Teaching License) வழங்கப்பட்டு, அந்தத் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்ததுடன், இலங்கையிலும் அவ்வாறானதொரு முறையை பின்பற்றுவது பொருத்தமானதென குழு மேலும் பரிந்துரைத்தது.

எனவே, இவ்வாறானதொரு முறையை தயாரிப்பதில் உடனடி கவனம் செலுத்தி, தனியார் வகுப்பு ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கு சட்ட ரீதியாக தொழில் அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான அசங்க நவரத்ன, முதிதா பிரிஷாந்தி, மஞ்சுளா திசாநாயக்க, பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோரும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல ஆகியோர் குழுத் தலைவரின் அனுமதிக்கமைய கலந்துகொண்டனர்.

அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் Association of International Schools of Sri Lanka (AISL) ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment