உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் அதிகளவான பணத்தை வசூலிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக ஒரு பாடத்துக்கு மாதாந்த கட்டணமாக 03,500 ரூபா தொடக்கம் 04,000 ரூபா வரை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்தக் கட்டணம் தவிர சேர்க்கைக் கட்டணமும் தனித்தனியாக வசூலிக்கப்படுவதாகவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, இந்நேரத்தில் ஆசிரியர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
எனவே, தனியார் வகுப்புகளில் வசூலிக்கப்படுகின்ற கட்டணம் குறித்து அரசு சில விதிமுறைகளை உருவாக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் கல்வி நிலையங்களை பராமரிப்பதற்கு அதிகளவான பணியாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மாணவர்களிடமிருந்து அதிகளவான பணத்தை பெற வேண்டியுள்ளதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலைமையால் பல பெற்றோர் தமது பிள்ளைகளை தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு வரி செலுத்தத் தவறிய ஆசிரியர்கள், நாடு முழுவதிலும் இருப்பதாகவும் நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment