கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது : அரசியல் தேவைகளுக்காக கூச்சல் போடுகிறார்கள் - மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 28, 2023

கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது : அரசியல் தேவைகளுக்காக கூச்சல் போடுகிறார்கள் - மஹிந்தானந்த

(எம்.வை.எம்.சியாம்)

தேசிய மற்றும் சர்வதேச கடன் மறுசீரமைப்புகள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித் தொகைக்கோ அல்லது தனி நபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.

வழக்கொன்றுக்காக நீதிமன்றில் ஆஜராவதற்காக வருகை தந்திருந்தபோது கடன் மறுசீரமைப்பு தொடர்பில்அவரிடம் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித் தொகைக்கோ அல்லது தனி நபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்போது எந்தவொரு தரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதனை மத்திய வங்கி சார்பாகவும், அரசாங்கம் என்ற வகையிலும் எம்மால் உறுதியாக கூற முடியும்.

தேசிய மற்றும் சர்வதேச கடன் மறுசீரமைப்புகள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் தொடர்ச்சியாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமைக்கு ஏற்ப அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரசாரங்கள் தோல்வியடைந்துள்ளது என்பதனை புரிந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராகவும், அவர்களின் அரசியல் தேவைகளுக்காகவும் இவ்வாறு கூச்சல் போடுகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment