உயர் நீதிமன்ற உத்தரவினால் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படவில்லை - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - News View

About Us

Add+Banner

Breaking

Thursday, April 6, 2023

demo-image

உயர் நீதிமன்ற உத்தரவினால் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படவில்லை - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
(நா.தனுஜா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவின் ஊடாகப் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சுயாதீனக் கட்டமைப்பான உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பு குறித்து எந்தவொரு நபருக்கோ அல்லது கட்டமைப்புக்கோ விளக்கமளிப்பதற்காக அழைக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மைய காலங்களில் நீதிமன்றக் கட்டமைப்பின் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் சட்டத்தின் ஆட்சியையும், நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்துவத்தையும் பாதுகாப்பதற்கான எமது கடப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றோம்.

நாட்டில் வலுவான ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்பானது எவ்வித அழுத்தங்களும், தலையீடுகளும், அச்சுறுத்தல்களுமின்றி சுதந்திரமாக இயங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இவ்விடயத்தில் (நீதிமன்ற சுயாதீனத்துவம்) சர்வதேசத்தின் நிலைப்பாடு என்னவென்று நோக்குகையில், நீதிமன்ற சுயாதீனத்துவமானது அரசினால் உத்தரவாதமளிக்கப்பட்டு, நாட்டின் அரசியலமைப்பு அல்லது சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், நீதிமன்றத்தினால் தம்வசமுள்ள உண்மைக் காரணிகளின் அடிப்படையில், சட்டத்துக்கு அமைவாக, எவ்வித மட்டுப்பாடுகளோ அல்லது அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ இன்றி தீர்மானம் மேற்கொள்ள முடியும் என்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவொன்று பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் ஊடாக ஆராயப்படுகின்றது என்பதை நாமறிவோம்.

இருப்பினும் உயர் நீதிமன்ற உத்தரவின் ஊடாக அதிகாரங்களோ அல்லது பாராளுமன்ற சிறப்புரிமைகளோ மீறப்படவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதுமாத்திரமன்றி சுயாதீனக் கட்டமைப்பான உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பு குறித்து எந்தவொரு நபருக்கோ அல்லது கட்டமைப்புக்கோ விளக்கமளிப்பதற்காக அழைக்கப்படக் கூடாது.

எனவே நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிப்பது அரசாங்கம் உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினரதும் கடமை என்பதுடன், நீதிமன்ற செயன்முறை மீதான எந்தவொரு தலையீடும் மிகவும் ஆபத்தானதும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும் என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *