மீரிகமவில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் யூத மத சம்பிரதாயமான கோஷர் முறையை மேற்கொண்ட ஐந்து யூத மதகுருமார்கள், பயண விசா நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த திங்களன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் (DIE) கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு திணைக்கள அதிகாரிகள், புலனாய்வு தகவலின் அடிப்படையில் தொழிற்சாலையில் சோதனை நடத்தி, மூன்று இஸ்ரேலியர்கள் உட்பட ஐந்து யூத மதகுருமார்களை கைது செய்தனர். மற்ற இருவர் அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.
முதல் கட்ட விசாரணைகளில், இவர்கள் சமீபத்தில் பயண விசாவில் இலங்கைக்கு வந்து, யூத மதச் சட்டங்களுக்கு ஏற்ப கோழி இறைச்சியை கோஷர் முறையில் தயாரித்து வந்தமை தெரியவந்தது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இறைச்சி, உள்ளூர் சபாட் ஹவுஸ் யூத மத மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, யூதர்கள் வருகை தரும் அருகம்பே பகுதிக்கு அனுப்பப்படவிருந்தது.
குடிவரவு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர், தெரிவிக்கையில், “இரண்டு இஸ்ரேலியர்கள் மார்ச் மற்றும் மே மாதங்களில் இலங்கைக்கு வந்தனர். மற்றவர்கள் ஜூன் முதல் வாரத்தில் வந்தனர். யூத மத உணவு சம்பிரதாயங்களை மேற்கொள்வது இலங்கையில் சட்டவிரோதமல்ல. ஆனால், பயண விசாவில் வணிக நோக்கில் இதுபோன்ற செயல்களை மேற்கொள்வது சட்டவிரோதமாகும். பயண விசாவில் எந்தவொரு வேலை தொடர்பான செயல்பாடும் அனுமதிக்கப்படாது.”
மேலும், இதுபோன்ற செயல்பாடு இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மதகுருமார்கள் இதற்கு முன் மத அனுமதி பெறாமல் இலங்கைக்கு வருவதற்கு முன் மதவிவகார அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குடிவரவு திணைக்களம், சமீபத்தில் பயண விசாவில் மதப் பிரசாரங்களை மேற்கொண்ட வெளிநாட்டு மதகுருமார்களை கைது செய்து நாடு கடத்தியுள்ளது. இது நேரடி மதப் பிரசாரமாக இல்லாவிட்டாலும், இதற்கு குறைந்தபட்சம் வணிக விசா பெற்றிருக்க வேண்டும் என்று அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஐந்து வெளிநாட்டு ஆண் மதகுருமார்களும், அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜாவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Vidivelli
No comments:
Post a Comment