டெங்கு, போதைப் பொருள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

டெங்கு, போதைப் பொருள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் பிரசன்ன

முனீரா அபூபக்கர்

டெங்கு நுளம்புகள் பரவுதல், போதைப் பொருள் பரவுதல் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

போதைப் பொருள் பாவனை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்தில் போதைப் பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களை பங்குபற்றுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேல் மாகாணத்தில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களிலேயே இவ் வேலைத்திட்டத்தை முதலில் ஆரம்பிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

டெங்கு நுளம்பு பரவல், போதைப் பொருள் அச்சுறுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகள் தொடர்பான பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஒப்பந்த நிறுவனங்களுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் (அபிவிருத்தி) எஸ். அமரசேகர தற்போதும் மாதத்திற்கு ஒருமுறை டெங்கு நுளம்புகள் பரவுவது தொடர்பில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் தொடர்பில் அறிக்கை பெறப்படுவதாக குறிப்பிட்டார்.

இதன்படி டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் ஆலோசனையின் பேரில், நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு ஏற்ப நான்கு வழிகாட்டுதல்கள் கடந்த காலங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் கட்டுமானத் துறை தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எனவே, கட்டுமானம் இடம்பெறும் பகுதிகளைச் சுற்றி தொற்றுநோய்கள் பரவினால், அது கட்டுமானத் துறையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் நிர்மாணத்துறையுடன் தொடர்புபட்ட சமூகத்தை தெளிவுபடுத்துவதும் தொற்றுநோய் மற்றும் தவறான நடத்தை நிலைமைகளைத் தவிர்ப்பதும் அவசரத் தேவை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment