(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நீதிபதிகளை உள்ளடக்கிய, இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்ததன் பின்னர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி சனத் நிஷாந்த வெளிப்படுத்திய கருத்துக்கள் மூலம் நீதவானின் பிணை வழங்கல் நடவடிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
பிணை வழங்கும் நடவடிக்கையினால் சட்டவாட்சி சீர்குலைந்துவிடும் என கருத்துப்பட வெளிப்படுத்தப்பட்ட குறித்த கருத்துக்கள் நீதித்துறைக்கு பாரிய அவமதிப்பு எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டார். .
இந்நிலையிக்லேயே முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், பிரதிவாதி சனத் நிஷாந்தவை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.
ஏற்கனவே, புத்தளம் மாவட்ட, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, நீதிமன்றை அவமதித்ததாக, அரசியலமைப்பு விதிவிதாங்களின் கீழ் சட்டத்தரணிகளான விஜித்த குமார மற்றும் பிரியலால் சிரிசேன ஆகியோர் இரு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
அவ்வழக்கிலும் நீதிமன்றில் ஆஜராகவும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கலை தயார் செய்து அது குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கும் உத்தர்வுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment