ஸ்பெயின் நாட்டு பெண்ணுடன் சேட்டை : காரைநகரில் கைதான ஒன்பது இளைஞர்களுக்கு சிறை மற்றும் தண்டப்பணம் விதிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

ஸ்பெயின் நாட்டு பெண்ணுடன் சேட்டை : காரைநகரில் கைதான ஒன்பது இளைஞர்களுக்கு சிறை மற்றும் தண்டப்பணம் விதிப்பு

காரைநகரில் வெளிநாட்டுப் பெண்ணுடன் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 09 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தண்டப் பணம் விதித்ததுடன், ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 02 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும் வழங்கவும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து காரைநகருக்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ். காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24ஆம் திகதி சென்றுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் மதுபோதையிலிருந்த இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, இப்பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்ததாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. 

கிடைத்த தகவலின்படி விசாரணைகளை நடத்திய பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 13 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இவ்வழக்கு விசாரணைகளின் போது, 04 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர். ஏனைய 09 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. 

நேற்று முன்தினம் (30) வெள்ளிக்கிழமை இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, 09 இளைஞர்களையும் நீதிமன்றம் குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 07ஆவது குற்றவாளிக்கு, 02 வருட சிறைத் தண்டனை விதித்து அதனை 05 வருட காலத்துக்கு ஒத்திவைத்த நீதவான், மூன்று குற்றங்களுக்கு தலா 1,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 01 இலட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையும், நஷ்டஈட்டை கட்டத்தவறின் 01 வருட சாதாரண சிறைத் தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 02ஆம் குற்றவாளிக்கு 02 வருட சிறைத் தண்டனை விதித்து, அதனை 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1,500 ரூபாய் அரச செலவாக செலுத்தும் மாறும் நஷ்டஈட்டை செலுத்தத் தவறினால் ஒரு வருட சிறைத் தண்டனையும், அரச செலவு பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 02 ஆம் மற்றும் 07 ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 06 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதித்து அதனை 05 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1,500 ரூபாயாக 07 பேருக்கும் தண்டம் விதித்துடன், 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். 

தண்டப் பணத்தை செலுத்தத் தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையும், நஷ்ட ஈட்டை செலுத்தத் தவறின் 06 மாத கால சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment