129 பயணிகளிடமிருந்து 4 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

129 பயணிகளிடமிருந்து 4 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவீடு

(இராஜதுரை ஹஷான்)

கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பயணச்சீட்டின்றி பயணம் செய்த 129 பயணிகளிடமிருந்து நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கொம்பனி வீதி புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி, உட்பட நிலைய சேவையாளர்கள் கடந்த மாதம் 08ஆம் திகதி முதல் செப்டெம்டர் மாதம் 30 ஆம் திகதி வரை பயணிகளின் பயணச்சீட்டு பரிசோதனையை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் மாத்திரம் 129 பேர் பயணச்சீட்டு இல்லாமல் புகையிரதத்தில் பயணம் செய்துள்ளனர்.

கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் இரண்டு வெளியேறல் வாயில் காணப்படுகிறது. நீதியரசர் அப்கர் மாவத்தை பக்கம் உள்ள வெளியேறல் வாயிலில் இருந்து மேற்கொண்ட பயணச்சீட்டு பரிசோதனையின் போதே 129 பேர் இவ்வாறு அகப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு ரூபா குறித்த காலப்பகுதியில் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் 18 சேவையாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 6 சேவையாளர்கள் மாத்திரமே சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

புகையிரத நிலையத்தில் உத்தரானந்த மாவத்தை பக்கம் உள்ள வெளியேறல் வாயிலில் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை.

புகையிரத நிலையங்களில் சேவைக்கான பதவி வெற்றிடம் காணப்படுவதால் பயணச்சீட்டு பரிசோதனை உள்ளிட்ட இதர சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகவே பதவி வெற்றிடங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்றார்.

No comments:

Post a Comment