கொட்டகலை, போகாவத்த பிரதேச பாடசாலையில் மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலையின் அதிபருக்கு தற்காலிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலை மாணவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திம்புள்ள, பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் நேற்றுமுன்தினம் ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 05 இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்தே இந்த அதிபர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை, போகாவத்த பிரதேச பாடசாலையில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் மாணவி வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லையென தெரிவித்து, அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம்” என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிடமிருந்து பணத்தை வாங்கி தருவதாக மாணவி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே அதிபர் மாணவியை தடியால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கருகில் வேலை செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கிலக்கான மாணவியுடன் தனக்கு 04 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த தந்தை பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டிலிருப்பதாகவும் தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புள்ள, பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே மாணவியை சிறு தடியொன்றில் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே மாணவியின் வாக்குமூலத்தின் பின் அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment