(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது சிங்கப்பூரில் நான் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் பகலுணவை உட்கொண்டதாக கூறப்படும் செய்தி அடிப்படையற்றதாகும். பகல் உணவை சிங்கப்பூர் எயார் லைனிலேயே பெற்றேன். வேண்டுமென்றால் உணவுப் பட்டியலை எடுத்து வந்து காட்டுகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) உரையாற்றியை எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்ட கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது, எனது பெயரை குறிப்பிட்டு நான் அர்ஜுன மகேந்திரனுடன் சிங்கபூரில் பகல் உணவை உட்கொண்டதாக கூறினர். ஆனால் நான் அன்றையதினம் காலை குறித்த அமைச்சருடன் காலை உணவை உட்கொண்டேன். பகல் உணவை சிங்கப்பூர் எயார் லைனிலேயே பெற்றேன். வேண்டுமென்றால் உணவு மெனுவையும் எடுத்து வந்து காட்டுகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இவ்வாறு பொய்யான கருத்தை வெவளியிட்டமை தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
நடுத்தர வர்க்கத்தினரே இணைந்து போராட்டத்திற்கு வருவதாக மரிக்கார் கூறியிருந்தார். இப்போது பெரிய போராட்ட நெருக்கடி வருகின்றது என்றும் கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஹிருணிகா பிரேமசந்திர இவ்வாறு கூறியிருந்தார். இப்போது இருவரும் ஒரே கருத்தை கூறுகின்றனர்.
இதற்கு நான் இணங்கப் போவதில்லை. ஹிருணிகா பிரேமசந்திரவின் வழியிலேயே மரிக்கார் எம்.பியும் போகின்றார் என்று தெரிகின்றது என்றார்.
இதன்போது எழுந்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் நான் ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டே கூறினேன். அதேபோன்று நான் எப்போதும் ஹிருணிகாவின் பாதையில் போவதில்லை என்றார்.
இவ்வேளையில் மீண்டும் பதிலளித்த ஜனாதிபதி அவ்வாறு போகாவிட்டால் என்னுடன் பயணிக்காலம் என்றார்.
ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் போது 6 மணித்தியாலங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளையில் அங்கு உள்ளக அமைச்சரை சந்தித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தாலும் ஜனாதிபதி அர்ஜுன மகேந்திரனுடன் பகல் உணவை உட்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment